மன்னாரில் காற்றாலை திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து, காந்திபூங்காவில் உள்ள ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
‘மக்களின் வாழ்வாதாரத்தினையும் இயற்கை சமநிலையினையும் பாதிக்கும் அபிவிருத்தி திட்டங்களை நிறுத்துக’ என்ற தொனிப்பொருளிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மக்களின் நிலங்களை பறித்து அந்நிய நாடுகளுக்கு வழங்குவதா அபிவிருத்தி?
இயற்கையினை பாதிக்கும் அபிவிருத்தி திட்டங்கள் வேண்டாம், காற்றாலைக்காக பறவையினங்களை அழிக்கலாமா,
மயிலத்தமடு மாதவனையையும் தாரைவார்க்கும் நோக்கமா?
முதலான வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக ரீதியாக மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடாத்திவருவோரை பொலிஸார் தாக்கியமை, அச்சுறுத்தியமை என்பது வடகிழக்கில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான அச்சுறுருத்தலாகவே கருதுவதாகவும் ஆட்சிகள் மாறினாலும் அவர்களினால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகள் தொடர்வதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

