பெக்கோ சமனின் மனைவி ஷாதிகாவின் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (09) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது விசாரணையை மேற்கொண்டு வரும் CID சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கைது செய்யப்பட்ட ஷாதிகா லக்ஷானி கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணையை நடத்தும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், சந்தேக நபர் போதைப்பொருள் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 54-ன் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின்போது அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.

விசாரணைகளின்போது சந்தேக நபரின் சகோதரி லக்ஷாணி தேஷாஞ்சலியின் இரண்டு வங்கிக் கணக்குகளில் 2024 ஆம் ஆண்டில் 563 மில்லியன் ரூபாயும், 2025 ஆம் ஆண்டில் 202 மில்லியன் ரூபாயும் புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்தது என்றும் தெரிவித்தார்.

சந்தேக நபரின் தந்தை சுனில் சாந்தவின் வங்கிக் கணக்கில் 2.11 மில்லியன் ரூபா புழக்கத்தில் இருந்ததாகக் கூறிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், தொழிலில் செங்கல் தொழிலாளியாக இருந்த இந்த நபரின் வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு புழக்கத்தில் இருந்தது என்பது குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதாகக் கூறினார்.

குறித்த பணம் போதைப்பொருள் கடத்தல் மூலம் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், பணத்தை வைப்பிலிட்ட நபர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வலையமைப்பில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply