திருகோணமலை பிரதேசத்தில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடி அகழ்வு பணி இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக குச்சவெளி பொலிஸ் விசேட பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி குச்சவெளி நீதிமன்றால் விடுக்கப்பட்ட விசேட அனுமதியினூடாக நேற்று (09) குறித்த பகுதியில் அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் 10 அடி ஆழம் தோண்டுவதற்கே நீதிமன்றால் அனுமதி வழங்கப்பட்டது.
குறித்த பகுதியில் மேற்கொண்ட அகழ்வின் போது ஆயுதப்பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அகழ்வு பணியின் போது குச்சவெளி பிரதேச செயலாளர், குச்சவெளி, திருகோணமலை மற்றும் புல்மோட்டை விசேட பொலிஸ் பிரிவினரும், புடவைக்கட்டு செந்தூர் பிரிவு கிராம உத்தியோகத்தர் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

