உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.
சர்வதேச மன நல தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு இன்று கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் மியுரு சந்திரதாச மேற்குறித்த தகவலை வெளிப்படுத்தினர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளையில், 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கல்வியின் கடுமையான அழுத்தம், வீட்டில் பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான அழுத்தம் ஆகியவை இந்த மன அழுத்தத்திற்குக் காரணங்கள் என்பதை இந்த மனநல சோதனை கண்டறிந்துள்ளது.
இலங்கையின் மக்கள் தொகையில் 19% பேர் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் என்பதையும் இந்த ஆய்வு காட்டுகிறது என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
