ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்தில் 25 வயதுடைய பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படிருந்தார்.
குறித்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாகவும், திட்டத்தைத் திட்டமிட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
எனினும் துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸ் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் இன்று (14) நேபாள பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
