ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நேற்றையதினம் (16) விசாகப்பட்டினம் கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் பங்களாதேஷு மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் இருவர் 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
மத்திய வரிசை வீராங்கனை சோபனா மோஸ்தரி ஆட்டம் இழக்காமல் 66 ஓட்டங்களையும் ரூபியா அக்தர் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 199 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 24.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது.
இதன்படி ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
