கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள துப்பாக்கிதாரி உட்பட ஏனைய சந்தேகநபர்கள் ‘சூம்’ தொழில்நுட்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
வழக்கு தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகளும், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளும் முன்வைத்த வாதங்களை கருத்திற் கொண்டு நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவை பிறப்பித்தார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிதாரி உட்பட ஏனைய சந்தேகநபர்களையும் அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
