பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் அதற்கு தீர்வாக, GR 11 பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
கடந்த 15ஆம் திதகி முதல் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அதன்படி நாட்டுக்கு 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
பொன்னி சம்பா அரிசியின் முதல் தொகுதி கடந்த 23ஆம் திகதி நாட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசியின் மற்றுமொரு தொகுதி கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதை அடுத்து, இறக்குமதியாளர்களுக்கு இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்களைப் பெறுவதற்கான தேவையிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரு இறக்குமதியாளருக்கு அதிகபட்சமாக 520 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
நாட்டில் மதிப்பிடப்பட்ட ஆண்டு அரிசி நுகர்வு சுமார் 2.4 மில்லியன் மெட்ரிக் டொன் என்பதுடன், இதில் கீரி சம்பாவின் ஆண்டு நுகர்வு 10 சதவீதம், அதாவது சுமார் 200,000 மெட்ரிக் டொன் ஆகும்.
