மசகு எண்ணை கப்பல் தொடர்பில் மக்களுக்கான எச்சரிக்கை

மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றி எரிகின்ற நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருந்து கொள்ளுமாறு இன்று 04 அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்தது.

மேலும் இவ்வெச்சரிக்கை திருக்கோவில், தம்பிலுவில், உமிரி, பொத்துவில், கல்முனை, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேச கடற்பிராந்தியத்தில் வாழும் மக்களை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை சங்கமன்கண்டி கடற்பரப்பில் இருந்த 38 மைல் தொலைவில் தீ விபத்திற்குள்ளான எரிபொருள் கப்பல் பனாமா அரசுக்கு சொந்தமான “எம்டி நியூ டயமண்ட்“ என்ற கப்பலாகும் கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இதுவரையில் பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலில் 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாகவும் அவர்களின் உதவிக்காக இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பற்றி உள்ள கப்பலின் தற்போதைய நிலையின் அடிப்படையில் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 2,70,000 மெற்றிக்தொன் எரிபொருளுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கடற்படை உறுதிப்பட தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir