இந்தியாவின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையில் புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் இருநாட்டு அரசுகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வார நிகழ்வு முன்பையில் நடைபெற்ற வேளையில், இது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால், இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவுடன் இது தொடர்பில் கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.
புதிய கப்பல் பாதையைத் தொடங்குவதன் மூலம் இந்தியா – இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விவாதித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
