இந்தியாவின் உதவியில் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தித் திட்டங்கள்!

இந்தியாவின் உதவியில் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது.

இத்திட்டங்கள் குறித்த ஒப்பந்தமும் கைச்சாத்தாகவுள்ளது.

குறித்த 33 திட்டங்களும் 2.37 பில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும்.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய உயர்ஸ்தானிகரும், பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரும் ஒப்பமிடவுள்ளனர்.

இத்திட்டங்களுக்காக இந்தியாவின் நிதியுதவியை பெறுவதற்கான அனுமதியை கோரி, சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கியுள்ளதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இது தொடர்பில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவின் பல்துறைசார் அனுசரணையின் கீழ், கிழக்கு மாகாணத்தில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக இந்தியாவும் இலங்கையும் 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி அன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

அதன்படி கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 33 அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

இதற்காக இந்தியா 2.37 பில்லியன் ரூபாவை வழங்குகிறது. அந்த உதவியின் முதற் கட்டமாக 371.83 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்குவதற்கு இந்தியா உடன்பட்டுள்ளது.

ஏற்கெனவே கைச்சாத்தாகியுள்ள ஒப்பந்தத்திற்கமைய, ஒவ்வொரு கருத்திட்டங்களுக்கும் வெவ்வேறான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. உட்கட்டமைப்பு, சமூக நலன்கள் மற்றும் கிராமிய மேம்பாடுகளுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply