சேவையை விட்டு விலகிய அரச வைத்திய அதிகாரிகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி சேவையை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு அரசினால் அறவிடப்பட வேண்டிய பிணை முறி, தண்டப் பணம் மற்றும் கடன் முன்பண நிலுவைகள் ஆகியவற்றின் மொத்தத் தொகை ரூபாய் 1,277 மில்லியன் ஆகும் என்று அந்தக் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சேவையை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய நிலுவைகள் மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற விசேட வைத்திய அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தற்போது முதுகலை பட்டப்படிப்புப் பயிற்சிக்காகவும், வெளிநாடுகளில் வேலை செய்வதற்காகவும், மற்றும் ஏனைய காரணங்களுக்காகவும் வெளிநாடு செல்லும் வைத்திய அதிகாரிகள் சேவையை விட்டு விலகுவது மற்றும் சேவையை கைவிடுவது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டுவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்த அதிகாரிகள் பிணை முறி மற்றும் தண்டப் பணத்தை செலுத்தாமல் இருக்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், அவற்றை அறவிடுவதற்கான நடவடிக்கைகளில் பல பலவீனங்கள் இருப்பதாகவும் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் 2015ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு இறுதி வரை மொத்தம் 705 வைத்தியர்கள் ஒப்பந்தத்தை மீறியுள்ளதும் இந்த கணக்காய்வின்போது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
