உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இன்றையதினம் (5) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகை நடத்த திட்டமிடபட்டிருந்தது.
அதன்படி வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் சுனாமி ஒத்திகைப் பயிற்சி இன்று (05) காலை பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலையில் ஆரம்பமானது.
காலை 9:15 மணியளவில் சுனாமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவிகள் வகுப்பு வகுப்பாக அணிவகுக்கப்பட்டு, உரிய அறிவுறுத்தல்களுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இடைத்தங்கல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மருத்துவ வசதிகள், உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
வட இந்து மகளிர் கல்லூரியில் வகுப்பு வகுப்பாக மாணவிகள் பிரிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டதுடன், கிராம மக்களும் தங்கவைக்கப்பட்டனர்.
ஒத்திகையின்போது பாதுகாப்பாக நகர்ந்த மாணவிகள் மற்றும் மக்களில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ், பருத்தித்துறை பொலிஸார் ஆகியோர் ஏற்றி வந்து, வட இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலுதவி சிகிச்சை நிலையத்தில் சிகிச்சையளித்தனர்.
இந்த நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் படைப்பிரிவு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை பொலிஸார், கடற்படை, இராணுவம், சிறப்பு அதிரடிப்படை, பருத்தித்துறை மாநகரசபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர், கியூமெடிக்கா உட்பட பல்வேறு அமைப்புகளும் திணைக்களங்களும் பங்கேற்றிருந்தன.
சுனாமி ஒத்திகை நிகழ்வில் வடமராட்சி மெதடிஸ்த் பெண்கள் கல்லூரியின் மாணவிகள் 500க்கும் மேற்பட்டோரும், பொதுமக்கள் சுமார் 250 பேரும் கலந்துகொண்டனர்.
குறித்த ஒத்திகை நிகழ்வு வருடாந்தம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
