கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 07ஆம் திகதி இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியது.
கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தின் 16ஆவது ஒழுங்கையில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் கடந்த 9ஆம் திகதி 3 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மேலும் 3 பேர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி மற்றும் கிரான்ட்பாஸ் பகுதிகளில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கித்தாரிக்கு தங்குமிட வசதி மற்றும் வாகன உதவிகளை வழங்கிய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கொழும்பு 13 மற்றும் கிரான்ட்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதானவர்களிடம் இருந்து ஒரு முச்சக்கரவண்டியும், 2 கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
