தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கடந்த 21ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிரணியிலுள்ள சில கட்சிகள் இணைந்து நுகேகொடையில் கூட்டத்தை நடத்தி இருந்தன.
இந்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கவில்லை. எனினும், எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டமொன்றை நடத்துவதற்கு அக்கட்சி திட்டமிட்டுள்ளது என அறியமுடிகின்றது.
அதேவேளை, நாடு முழுவதும் ஆயிரம் கூட்டங்களை நடத்துவதற்கு உத்தேசித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக டிசம்பரில் இரு கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துவருகின்றது. இதற்கு முன்னதாக எதிர்வரும் 8ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் விசேட நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
அதேபோல எதிரணியிலுள்ள ஏனைய சில கட்சிகளும் சில கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. முக்கிய தருணங்களில் இணைந்து கூட்டங்களை நடத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
