பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் குறித்த திட்டத்திற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய வேளையில் அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நடத்துனர்கள் இருக்கும் வரை இந்த திட்டம் வெற்றிபெறாது. அரசாங்கம் தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இல்லையெனில், இதை செயல்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் இல்லாமல் இது செயல்படுத்தப்பட்டால், இந்த திட்டம் கடந்த காலத்தில் நடந்த ஒரு முன்னோடி திட்டமாக வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும், இது ஒரு தினசரி மோசடியாக மாறும் என்றும் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டுகிறார்.
இந்த திட்டங்களை அரை மனதுடன் செயல்படுத்த வேண்டாம் என்றும், நாட்டை கேலிக்குரியதாக மாற்றக்கூடாது என்றும் பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க, இந்த அட்டை முறையின் நன்மையை சுட்டிக்காட்டினார்.
தனியார் பேருந்துகளின் நாளாந்தம வருமானத்திலிருந்து எங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் கிடைப்பதில்லை. இருப்பினும் இந்த அட்டை முறையில் பேருந்து உரிமையாளரின் வருமானம் பாதுகாக்கப்படுகிறது.
எனினும் இந்த முறைக்கு வங்கிகள் வசூலிக்கும் தரகு பணம் குறித்து ரணசிங்க தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
போக்குவரத்து அமைச்சகத்துடனான கலந்துரையாடல்களின் போது, இந்த தரகு பணம் ஒரு வீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று அரசு தரப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய சம்பத் ரணசிங்க, தற்போது 1.3 வீதம் மற்றும் 1.8 வீத வரம்பில் தரகு பணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளதாக தெரிவித்தார்.
பேருந்து கட்டணம் செலுத்திய பின்னர் மீதிப் பணத்தை திரும்பப் பெறாதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக, வங்கி அட்டைகள் ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டிஜிட்டல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
