நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் இராணுவ வீரர்களை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி, இராணுவத் தளபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக சுமார் 20,500 இராணுவ வீரர்கள் ஏற்கனவே நாடு முழுவதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்தில் மட்டும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 3,790 பேரை மீட்டுப் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்ப இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக மோசமான வானிலை காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக வீதிகள் தடைப்பட்டுள்ளதால் இந்தக் மீட்புப் பணிகளுக்குத் தடைகள் ஏற்பட்டுள்ள போதும், இத்தகைய தடைகளுக்கு மத்தியிலும் மீட்புப் பணிகளை இராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இராணுவத்திற்கு மேலதிகமாக, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையும் மீட்புப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
