நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று (08) நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்ந்து அவற்றை புனரமைக்க எடுக்கும் காலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் சாதாரண பழுதுபார்ப்பு மேற்கொண்டு திறக்க முடியாத வீதிகள் குறித்து அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, இது தொடர்பாக அறிக்கையை வழங்குமாறும் கோரினார்.
இனிமேல் நுவரெலியா மாவட்டத்தில் சில வீதிகள் மற்றும் பாலங்களை அமைக்கும் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளை கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகள், வடிகாண்கள் மற்றும் பாதுகாப்பு மதில் சுவர்களை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து புனரமைப்பு நடவடிக்கைகளையும் நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
