கட்டானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு உற்பத்தி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது.
வெடிப்புச் சம்பவத்தின் போது படுகாயமடைந்த இளைஞன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணையின் படி உயிரிழந்த இளைஞன் குறித்த பட்டாசு உற்பத்தி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றுபவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் வெடிப்புச் சம்பவம் நிறுவனத்தின் வெளிப்புற கொட்டகையொன்றில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டானை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
