இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
தியபெதும பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (11) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
அத்தனகடவல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் கடந்த 9ஆம் திகதி பயணித்துக் கொண்டிருந்த வேளையில், குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகன வருமான உத்தரவு பத்திரம் இன்றி, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது.
எனினும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், முறைப்பாட்டாளரின் மோட்டார் சைக்கிளின் காப்புறுதிச் சான்றிதழ் மற்றும் காலாவதியான வாகன வருமான உத்தரவு பத்திரம் என்பவற்றை சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்வசம் எடுத்துள்ளனர்.
அந்த இரண்டு ஆவணங்களையும் திருப்பி வழங்குவதற்காக 5,000 ரூபா பணத்தை அவர்கள் இலஞ்சமாக கோரியுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த நபர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை அளித்துள்ளார்.
அதன்படி குறித்த இரண்டு அதிகாரிகளும் நேற்று காலை 11.30 மணியளவில் தியபெதும வாராந்த சந்தைக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேகநபர்கள் இருவரும் ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
