பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் கற்கும் 19 சிரேஸ்ட மாணவர்கள், கனிஷ்ட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
கைதான மாணவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (12) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
நேற்றையதினம் விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் உசைன் சந்தேக நபர்கள் 19 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் சேலை அனுமதித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 24ம் திகதிக்கு தவணையிட்டு மேலதிக நீதிவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
