அளுத்கம – மாத்தறை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த, வெலிபென்ன பொலிஸில் கடமையாற்றிய 54 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
நேற்றையதினம் இரவு (15) அளுத்கம – மாத்தறை வீதியில் லபுவெல்கொட சந்தியில் பொலிஸ் குழுவினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அந்த வீதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் நிறுத்த உத்தரவிட்டனர்.
இதன்போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் பொலிஸ் சார்ஜன்ட் வீசி தூக்கி எறியப்பட்டு அருகில் இருந்த வடிகாலுக்குள் விழுந்ததில், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
உடனடியாக அவரை அளுத்கம தர்கா நகர் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், ,அதற்கு முன்னரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் லேசான காயங்களுடன் அளுத்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிபென்ன பொலிஸார் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
