யாழ் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
கைக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த வன்முறைச் சம்பவம் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது.
வாள், கத்தி முதலான ஆயுதங்களுடன் வருகை தந்த குழுவொன்றே இவ்வாறு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
இதன்போது வீட்டிலிருந்த உழவு இயந்திரம், வாகனம், வீட்டுப் பொருட்கள் மற்றும் கதவுகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன.
வன்முறையில் ஈடுபட்ட குறித்த குழுவினர் மதுபோதையில் நீண்ட நாட்களாக கட்டைக்காடு கிழக்கு பகுதியில் உள்ள குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் உள்ள போதிலும், சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் தயக்கம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
