மரக்கறிகளை நிவாரணமாக வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை

700 ரூபா என்ற சந்தை பெறுமதியிலான 6 மரக்கறிகள் அடங்கிய பொதியை, 350 ரூபாவுக்கு நிவாரண விலையில் வழங்குவதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கரட், உருளைக்கிழங்கு, பீட்றூட், தக்காளி, லீக்ஸ், நூக்கல் முதலான ஆறு மரக்கறிகள் அடங்கிய பொதியே நிவாரண விலையில் வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில், கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்கள், இசுறுபாய, சுஹுறுபாய, செத்சிறிபாய, நுகேகொடை முதலான பகுதிகளில், இவ்வாறு மரக்கறி பொதிகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அபிவிருத்தி மத்தியநிலையத்தினால் விவசாயிகளிடமிருந்து மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir