IS பயங்கரவாதக் குழுவிற்கு எதிராக அமெரிக்கா பாரிய வான்வழித் தாக்குதல்!

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையினால் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதக் குழுவிற்கு எதிராக அமெரிக்கா ‘பாரிய மற்றும் மிக மோசமான’ வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ‘Truth Social’ தளத்தில் பதிவு ஒன்றை இட்டு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நைஜீரியாவில் வாழும் அப்பாவி கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து IS பயங்கரவாதிகள் முன்னெடுக்கும் கொடூரமான கொலைகளுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“கிறிஸ்தவர்களைக் கொல்வதை நிறுத்தவில்லை என்றால், அதற்குப் பாரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என நான் ஏற்கனவே இந்தத் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தேன். இன்று இரவும் அதுவே நடந்துள்ளது” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தாக்குதல் குறித்த மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை. அமெரிக்க இராணுவம் ‘பல பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளதை’ மட்டுமே அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் தனது தலைமையின் கீழ் தீவிரவாத இஸ்லாமிய பயங்கரவாதம் செழிக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்தத் தாக்குதலுக்கு நைஜீரிய அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

எனினும் இது குறித்து நைஜீரிய அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

போகோ ஹராம் மற்றும் இஸ்லாமிய அரசு (IS) ஆகிய குழுக்கள் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வடகிழக்கு நைஜீரியாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா கடந்த வாரமும் சிரியாவில் செயற்படும் IS பயங்கரவாதிகளை இலக்கு வைத்து பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply