முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தடுப்புக்காவல் உத்தரவு!

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2001 ஆம் ஆண்டு இராணுவத்தினால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வெலிவேரிய பகுதியில் பாதாள உலகக் குழு குற்றவாளி ஒருவரிடம் இருந்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அவர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழு தலைவனான ‘மாகந்துரே மதூஷிடம்’ நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது.

முன்னாள் அமைச்சரின் குறித்த துப்பாக்கி, வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இது தொடர்பிலான விசாரணையின் போதே முன்னாள் அமைச்சர் கைதுசெய்யப்பட்டு இன்றையதினம் (27) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply