வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலவத்தை, கிழக்கு பண்டிரிப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6ஆம் திகதி வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் சடலங்கள் வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
கவலைக்கிடமான நிலையில் இருந்த மேலும் இரண்டு பேர் வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 5 பேரின் பிரேத பரிசோதனைகள் சிலாபம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது மதுசாரம் நஞ்சானதாலேயே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றைய நபரின் பிரேத பரிசோதனை இன்று (08) சிலாபம் வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
மதுபானம் அருந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்ட மேலும் 08 பேர் தற்போது நீர்கொழும்பு மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த இரு பெண்களையும் நேற்று (07) மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமபவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
