சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளைச் சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (09) காலை இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் (09) காலை யாழ். கைதடி ஏ9 வீதிப் பகுதியில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் மரக்குற்றிகளை ஏற்றி வந்த ‘ஹன்ரர்’ (Hunter) ரக வாகனத்தை மறித்துச் சோதனையிட்டனர்.
இதன்போது, காலாவதியான அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவது கண்டறியப்பட்டது.
இவ்வாறு கடத்தி வரப்பட்ட மரக்குற்றிகளுள் தேக்கு மற்றும் வேம்பு போன்ற பெறுமதியான மரங்கள் காணப்பட்டன.
இதனையடுத்து வாகனத்தையும், மரக்குற்றிகளையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
