எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் தெரிவிக்கையில்,
நெல் விலை திருத்தம் தொடர்பாக ஏற்கனவே நாங்கள் விடயங்களை முன்வைத்துள்ளோம். குறிப்பாக நாடு நெல் 120 ரூபாவாகவே நீடிக்கும். சம்பா நெல்லின் விலை 125 ரூபாவிலிருந்து 130 ரூபா வரை அதிகரிக்கப்படும். விவசாயிகளின் தரப்பைப் பொறுத்தவரை கீரி சம்பா 132 ரூபாவிலிருந்து 140 ரூபா வரை அதிகரிக்கப்படும்- என தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் போகம் முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவித்த அமைச்சர் நாமல் கருணாரத்ன, அறுவடை செய்யும் போது விவசாயிகளால் அந்த விலைகளுக்கு நெல்லை வழங்க முடியும். ஆனால், அதற்கு இணையாக அரிசி விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை. அவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுக்கும் எதிர்பார்ப்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.
ஏனைய ஆண்டுகளில் இக்காலப்பகுதியில் நாட்டில் ‘அரிசி மாஃபியா’ செயற்பட்ட போதிலும், இந்த ஆண்டு இக்காலப்பகுதியில் அது இடம்பெறவில்லை” என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
