டுபாயிலிருந்து இந்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தும் பிரதான கடத்தல்காரரான ‘டுபாய் இஷார’ என்பவரின் போதைப்பொருளை விற்பனை செய்யும் சந்தேகநபர்கள் மூவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கம்பளை அங்கம்மன, துன்தெனிய ஆகிய பகுதிகளில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (17) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி கம்பளை, நாவலப்பிட்டி, உலப்பனை, தொலுவ, கெலிஓயா, பேராதனை வெலிகல்ல ஆகிய பகுதிகளுக்கு இந்த ஹெரோயினை விநியோகித்து வந்துள்ளனர்.
இதன்போது கம்பளை தொலுவ பகுதியில் இருவரும், கம்பளை மஹர பகுதியில் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்களுக்கு கொழும்பில் இந்த போதைப்பொருள் வழங்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
கைதான நபர்களிடம் இருந்து 5 கிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
