ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.
தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (27) இடம்பெற்றுள்ளது.
இன்றையதினம் (27) காலை ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினர் “நீதியின் மரணம்” எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்திருந்த நிலையில், அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர்.
அத்துடன் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் நடைபாதை தடைப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.
7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.
எனினும் அதற்கு முறையான பதில் கிடைக்காத காரணத்தினால் போராட்டக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
