பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட சிறிய அளவிலான சிங்கி இறால்களுடன் ஒருவர் கைது!

பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட சிறிய அளவிலான சிங்கி இறால்களைப் பிடித்து, வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடமொன்று பேருவலை, மருதான பிரதேசத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் களுத்துறை அலுவலக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, பிடிக்கத் தடைசெய்யப்பட்ட சிறிய அளவிலான சிங்கி இறால்கள் மற்றும் முட்டையிடக்கூடிய சிங்கி இறால்கள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சிறிய அளவிலான மற்றும் முட்டையிடக்கூடிய சிங்கி இறால்களை மீனவர்கள் பிடிப்பதால், கடலில் சிங்கி இறால்களின் இனப்பெருக்கம் பெருமளவில் குறைவடைவதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இந்த மோசடியில் ஈடுபட்ட அதே பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply