நாட்டில் உள்ள 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகளில் 10 க்கும் குறைவான ஆசிரியர்கள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 10,047 பாடசாலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பாடசாலைகளில் 3,065 பாடசாலைகளில் 10-க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அப்பாடசாலைகளுள் ஒரு தேசிய பாடசாலையும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 1,645 அரச பாடசாலைகளில் 50 க்கும் குறைவான மாணவர்களே உள்ளதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது.
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அரச பாடசாலைகளில், ஒரு தேசிய பாடசாலையும் 1,644 மாகாண பாடசாலைகளும் உள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
51 முதல் 100 வரையான மாணவர்களைக் கொண்ட 1,648 அரச பாடசாலைகள் உள்ளதோடு, அவை அனைத்தும் மாகாண பாடசாலைகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்காக அரச பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
2025ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்காக 2,66,281 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
