நாட்டுக்குள் ‘குஷ்’ ரக போதைப்பொருளை கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (06) அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய்லாந்து ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவரது பயணப் பையின் ரகசியப் பகுதியில் இரண்டு பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 116 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் சந்தைப் பெறுமதி 2 கோடியே 11 இலட்சத்து 60 ஆயிரம் (ரூபா 21,160,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதான நபர் அடிக்கடி வான்பயணங்களை மேற்கொள்ளும் ஒரு வர்த்தகர் என்பதும் தெரியவந்துள்ளது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக மேலும் இருவர் நீர்கொழும்பு நகரிலுள்ள சொகுசு விற்பனை நிலையத்திற்கு அருகில் காத்திருப்பதாக தெரியவந்தது.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 36 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
