திஸ்ஸமஹாராம நகருக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் 23 பாடசாலை பேருந்துகள் மற்றும் 3 வேன்கள் போக்குவரத்துக்குத் தகுதியற்றவை என அடையாளம் காணப்பட்டு அவற்றுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம நகருக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பாடசாலை பேருந்துகள் மற்றும் வேன்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில், போக்குவரத்துக்குத் தகுதியற்ற பேருந்துகள் மற்றும் வேன்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
தெபரவெவ ஜனாதிபதி வித்தியாலயத்திற்கு முன்னால் குறித்த வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மோட்டார் வாகனப் பரிசோதகர்களின் பங்கேற்புடன் இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது 29 வாகனங்கள் சோதனையிடப்பட்ட நிலையில், அவற்றில் 26 வாகனங்கள் (சுமார் 90%) ஓடுவதற்குத் தகுதியற்ற நிலையில் இருந்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
குறித்த வாகனங்களை மீண்டும் திருத்தி, மோட்டார் வாகனப் பரிசோதகர் ஒருவரிடம் காண்பித்து உரிய தகுதிச் சான்றிதழைப் பெற்றால் மாத்திரமே அவற்றை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதிக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
