அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பல முக்கிய தகவல்களைப் பொலிஸாரிடம் வௌிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதான நபரிடம் நடாத்திய ஆரம்பகட்ட விசாரணையின் போது,
சந்தேகநபர் தாம் இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலைக்குப் பின்னர் கொட்டாவ அருகே காரிலிருந்து இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலம் அம்பலாங்கொடைக்கு சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையான இவர், கரந்தெனிய சுத்தா என்பவருடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரந்தெனிய சுத்தா தொலைபேசி ஊடாக வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த கொலையைச் செய்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
கொலை செய்த பின்னர், கரந்தெனிய சுத்தா தனக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணத்தையும் ஹெரோயின் போதைப்பொருளையும் வழங்கியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் அவர் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவிடம் பணம் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், இவர் கரந்தெனிய சுத்தாவின் குழுவினருடன் செயற்பட்டுள்ளாரா என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும், அவர் செய்த வேறு கொலைகள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் 12 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இதுவரையில் துப்பாக்கிதாரி உட்பட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிதாரி நேற்று முன்தினம் (21) மாலை 6.20 மணியளவில் அம்பலாங்கொடை, தெல்துவ பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்து, அதற்கு அருகிலுள்ள கருவாத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த வேளையில், ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
46 வயதான சுனில் ரஞ்சித் எனப்படும் இவர், 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்திலிருந்து சட்டப்பூர்வமாக விலகியவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
