உதவி கோரும் மற்றுமொரு ஈரான் கப்பல்!

பாணந்துறை கடற்பரப்பிற்கு அருகிலுள்ள இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தில் மற்றுமொரு ஈரானியக் கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் சுமார் 300 சிறுவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவிப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நீர் மற்றும் உணவு, பெற்றுக்கொள்ள 24 மணிநேரத்திற்கு இலங்கையின் துறைமுகத்தைப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, ​​அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானின் போர்க்கப்பல்களில் ஒன்றைத் தாக்கி மூழ்கடித்த 24 மணி நேரத்திற்குள், மற்றுமொரு கப்பல் அவசர உதவி கோரியுள்ளது.

எனினும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு கோரிக்கையினை இன்னும் ஏற்கவில்லை எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நிலைகொண்டுள்ள மற்றுமொரு ஈரானிய கப்பல், அவசரமாக துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரியுள்ள நிலையில், அது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உடனடியாக பகிரங்கப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய சூழலில் அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறித்த ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் பிராந்திய கடற்பரப்பிற்கு (Territorial Waters) சற்று வெளியே நிலைகொண்டுள்ளதாகவும், துறைமுகத்திற்குள் நுழைய அரசாங்கத்தின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நேற்றையதினம் இலங்கை கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தில், இதுவரை 87 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (05) நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் விவாதத்தின் போது அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply