எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம், இன்று (19) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை மற்றும் குமார ஜயகொடி தற்போதைய அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்னர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கமைய இன்று காலை குறித்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
இதேவேளை உலகில் நிலவும் தற்போதைய சூழ்நிலை குறித்து எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த விவாதம் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விவாதம் நாளை மற்றும் (20) சனிக்கிழமையும் நடைபெறவுள்ளதுடன், நாளைய விவாதத்தில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
