QR குறியீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இன்று முதல் புதிய நடைமுறை!

வேறு கைபேசி இலக்கங்களின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் QR குறியீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2026 மார்ச் 14ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் QR குறியீட்டை மீளப் பெறும் போது, அந்தப் பதிவை மேற்கொண்ட கைபேசி இலக்கம் பயன்பாட்டில் இல்லாமை அல்லது வேறு ஒருவரிடம் இருப்பதனால் பொதுமக்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த புதிய அம்சம் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

உங்கள் வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வாகன இலக்கம் மற்றும் சேஸி இலக்கத்தை சரியாக உள்ளிடுவதன் மூலம் மாத்திரமே இந்த புதிய வசதியைப் பயன்படுத்த முடியும்.

வாகனம் ஏற்கனவே வேறொரு இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் (பதிவு 2026 மார்ச் 14க்கு முன்னதாக இருத்தல் வேண்டும்), உங்களிடமுள்ள சரியான தகவல்களை உள்ளிட்டு தற்போதுள்ள பதிவை ரத்து செய்து, உங்களது புதிய தொலைபேசி இலக்கத்தின் கீழ் பதிவு செய்துகொள்ள முடியும்.

நீங்கள் ‘Override’ எனும் தெரிவைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த வாகனத்துடன் தொடர்புடைய பழைய கணக்கு தரவுத்தளத்திலிருந்து நீக்கப்பட்டு, உங்கள் தகவல்களுடனான புதிய கணக்கு உடனடியாகச் செயற்படுத்தப்படும்.

இந்தச் செயல்பாட்டின் மூலம் ஏற்கனவே இருந்த பதிவு ரத்து செய்யப்படுவதால், முந்தைய பயனருக்கு அந்த வாகனத்திற்காகக் கிடைத்த சலுகைகள் மற்றும் அணுகல் இல்லாது ஒழியும். இதன் மூலம் இதுவரை காலம் வேறு தரப்பினரிடமோ அல்லது பயன்பாட்டில் இல்லாத தொலைபேசி இலக்கங்களின் கீழே பதிவு செய்யப்பட்டிருந்த வாகனங்களின் உரிமையாளர்கள், தடையின்றித் தமது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தமக்கு சட்டபூர்வமான உரிமை இல்லாத வேறொருவருக்குச் சொந்தமான வாகனத்தின் QR தரவுகளை நீக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply