13 ஆவது திருத்தத்தை பலவந்தமாக இந்தியா திணித்ததாக குற்றம் சுமத்தும் கோட்டாஅரசு !

இந்தியா தான் 13 ஆவது திருத்தச் சட்டத்தை எமக்கு பலவந்தமாக திணித்தது இலங்கை போன்ற சுயாதீன நாட்டுக்கு எவ்வாறு இன்னொரு நாடு அழுத்தம் கொடுக்க முடியும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பி உள்ளார்

கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு

13 ஆவது திருத்தமே எங்களுடைய நாட்டை ஒன்பது மாகாணங்களாக பிரிப்பதற்கு காரணமாக இருக்கின்றது. சிறிய நாட்டை பிரிப்பதற்கு அவசியமல்ல. அதனை மீறியும் பிரிக்கப்பட்டுள்ளதென்றால் அது இந்த நாட்டை சமஷ்டி ஆட்சிக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த சமஷ்டி பொருத்தமானது.

வட, கிழக்கை தனி இராஜ்ஜியமாக பிரித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே பாரிய அச்சுறுத்தலாக அமையும். இந்தியாவின் பாதுகாப்பானது இலங்கையின் தங்கியுள்ளதென இந்தியாவிலுள்ள சிரேஷ்ட வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆகவே, வட, கிழக்கு தனி இராஜ்ஜியமாக உருவெடுத்தால் தமிழ் நாடு பார்த்துக் கொண்டிருக்காது. தமிழ் நாடும் தனியாக்கப்படும்.

இலங்கை ஒற்றையாட்சியாக இருப்பது இந்தியாவிற்கும் நல்லது. வட, கிழக்கு ஒன்றிணைக்கப்பட்டால் இலங்கை சீர்குலையும். வடக்கிற்கு சிங்கள மக்கள் செல்ல முடியாது போனால் தெற்கிலுள்ள தமிழ் மக்களுக்கு என்னவாகும். அது இந்தியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir