யாழ்ப்பாணத்தில் ஒன்பது வயது சிறுமிக்கு கொரோனா!

யாழில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது வயதுச் சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதான வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உடுவில் – சங்குவேலியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் நேற்றிரவு அறிக்கையிடப்பட்டுள்ளது.

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நட்சத்திர விடுதியில் பணியாற்றும் தந்தையிடம் சென்று திரும்பிய தாய் மற்றும் மகள்கள் இருவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன.

அவர்களில், ஒன்பது வயதுச் சிறுமிக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாய் மற்றும் இன்னொரு பிள்ளைக்கு முதல் பரிசோதனையில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி – உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும் இரண்டு வயது மகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir