கடுமையாக்கப்படவுள்ள சுகாதார நடைமுறைகள்

முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் ஆகிய சுகாதார நடைமுறைகள் மிகவும் கடுமையாக கண்காணிக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொதுமக்கம் மத்தியில் சுகாதார நடைமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மேல்மாகாணத்தில் 110 பொலிஸ் பிரிவுகளுக்கும், குளியாப்பிட்டிய மற்றும் எஹெலியகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கும் குருணாகலை மாநகரசபை பிரதேசங்களுக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

அத்துடன், கிரியுள்ள, புலத்கோபிட்டிய, மாவனெல்ல, எம்மாத்தகம பொலிஸ் பிரிவுகளும் கலிகமுவ பிரதேச சபை பிரிவும் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் இருந்து இன்றுவரை 2400 மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

356 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்கள் 200 மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஒக்டோபர் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் படி முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் என்பன கட்டாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இரண்டுவார சலுகைக்காலம் வழங்கப்பட்டது. 29 ஆம் திகதியில் இருந்து மிகவும் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி 6 நாட்களில் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் ஆகியவற்றை கடைப்பிடிக்காத நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது” என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir