தாக்குதல் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மோதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரையும் அவர்களுக்கு உதவிய சந்தேக நபர் ஒருவரையும் நேற்று (05) மோதர கடற்கரையில் உள்ள ரெட்பனாவத்தை பிரதேசத்தில் வைத்து மோதர பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21, 23 மற்றும் 24 வயதுடைய கிம்புலா எல, புளூமெண்டல் மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
இதேவேளை, மோதர கடற்கரையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 25 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை அடுத்து, அவர் தற்காலிகமாக வசித்து வந்த ராகமையிலுள்ள வீட்டில் இருந்து T-56 ரக துப்பாக்கி, 2 மகசின்கள், 265 T-56 ரவைகள், 9mm ரவைகள் 23 மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக சந்தேகநபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியிடம் இருந்து 15 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.