சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக, எதிர்வரும் 2024 ஆண்டு மார்ச்மாதம் 31ஆம் திகதிவரை , அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இணங்க உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இலவச விசா நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்படி பரிந்துரைக்கப்பட்ட நாடுகளின் இராஜதந்திர, உத்தியோகபூர்வ, பொது விவகாரங்கள், சேவை மற்றும் சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விசா இல்லாத ஆட்சியை அனுபவிக்க தகுதியுடையவர்கள் என்று திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதற்கிடையில், மேற்கூறிய பிரஜைகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் 2024 மார்ச் மாதம் 31வரை இலவசமாக வழங்கப்படுவதற்கு உட்பட்டு இலத்திரனியல் பயண அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகள் 30 நாட்கள் இலவச விசா காலத்தை அனுபவிக்க முடியும் எனவும் இலங்கைக்கு முதலில் வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இரட்டை நுழைவு வசதி அனுமதிக்கப்படுகிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் இலவச இலத்திரனியல் பயண அங்கீகாரத்திற்கு 2024 மார்ச் 31வரை விண்ணப்பிக்கலாம், இந்த இலவச இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை மேலும் நீடிக்க முடியாது எனவும் அது 30 நாட்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது எனவும் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், வருகைத் திகதியிலிருந்து 30 நாட்கள் இலவச இலத்திரனியல் பயண அங்கீகாரத்திற்கான காலம் 2024 மார்ச் 31ஆம் திகதிக்குப் பிறகு காலாவதியாகும் பட்சத்தில், உரிய கட்டணத்தைச் செலுத்தி விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.