
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகனத் திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு ஒன்றினை நேற்றிரவு வீசியுள்ளனர்.
குறித்த வெடிகுண்டு வாகனத் திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடித்துள்ளது. இதனால் காரில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்த அதேநேரத்தில் வெடிக்காத நிலையிலும் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த வெடிகுண்டு உள்ளூர்த் தயாரிப்பாக இருக்கலாம் என்றும், அது பெரியளவிலான சேதங்களை விளைவிக்க கூடியவாறு காணப்படவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவருகிறது.