நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும்!

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமை பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.

சாதாரண நடைமுறைக்கு அமைவாக ஒவ்வொரு மாதமும் ஒரு சனிக்கிழமை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மூடப்படுவது வழமையாகும்.

இதனை அடிப்படையாகக் கொண்டே சனிக்கிழமை கூட்டுத்தாபனம் மூடப்படவுள்ளதாக செய்திகள் பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் தற்போதுள்ள விசேட தேவை மற்றும் சனிக்கிழமை இரவு QR குறியீடு (QR Code) மீளமைக்கப்பட உள்ளதால், அன்றைய தினம் பெற்றோலிய கூட்டுத்தாபனம் திறந்திருக்கும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் தேவை ஏற்படின் ஞாயிற்றுக்கிழமையிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.

இதேவேளை, மொத்த களஞ்சிய முனைய நிறுவனமும் சனிக்கிழமை எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

இதன் காரணமாக நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவது குறித்து எந்த அறிவித்தலோ அல்லது தீர்மானமோ எடுக்கப்படவில்லை என்றும் முகாமை பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply