516 பேர் கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட ஐவரில் இருவர் சிகிச்சை முடித்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு,

கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 516 பேரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் அல்லது தொற்று அபாயமுடையவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அண்மையில் திருவையாறு பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவிலிருந்து வருகை தந்திருந்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்திலிருந்து அவர் குறுக்கு வழியைப் பயன்படுத்தியே இவ்வாறு வருகைதந்துள்ளார். அவர்கள் தமது சமூகப் பொறுப்பை உணராத தன்மையும், தங்களுடைய பாதுகாப்பு மற்றும் ஏனையோருடைய பாதுகாப்புப் பற்றி அக்கறையில்லாத வகையிலும் செயல்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir