ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்குவதா?

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகரவுக்கு பிணையளிப்பதா? இல்லையா? என நாளை மறுதினம் 9 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

இன்று டிசம்பர் 7 ஆம் திகதி குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்த நிலையில்,நேற்று அம்மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி விடுமுறையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படியே அது குறித்த தீர்ப்பு நாளை மறுதினம் 9 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகர, உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரின் பிணை மனுக்கள், கம்பஹா மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி விசாரணைக்கு வந்த போதே நீதிபதி நிமல் ரணவீர இன்று தீர்ப்பை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

கடந்த 4 மாதங்களாக விளக்கமறியலில் உள்ள ஷானி அபேசேகர மற்றும் சுதத் மெண்டிஸ் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ண பண்டார மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள ஆகியோர் முன்வைத்த வாதங்கள் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஷனில் குலரத்ன முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் நீதிபதி இதனை அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே தீர்ப்பு நாளைமறுதினம் வரை பிற்போடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir