அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 36 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 36 இந்திய மீனவர்கள் கடந்த தினங்களில் கைது செய்யப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது.

அவர்களின் 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக் கடற்பரப்பில் வெளிநாட்டு மீனவர்களின் வருகையை தடுக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

எனினும் கடந்த தினம் முதல் இந்த நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி கடந்த தினம் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் 22 மீனவர்கள் அவர்களது படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

தற்போது அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று நேற்றையதினம் மன்னார் குதிரைமலை மேற்கு பகுதியில் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

அதேநேரம் இந்திய மீனவர்களால் தங்களது வளங்கள் சூறையாடப்படுவதை தடுக்கக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கு யாழ்ப்பாண மீனவ அமைப்புகளும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir