மாணவிக்கு கொரோனா தொற்று- பலர் தனிமைப்படுத்தலில்!

வவுனியா கற்குழியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், நகர பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

குறித்த மாணவி வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

இவர் வேறு நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் அவருக்கு எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதனிடையே, குறித்த மாணவி கடந்த மூன்று மாதங்களாக பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

எனினும் நேற்றயதினம் பாடசாலைக்கு அவர் சென்று கல்வி செயற்பாடுகளில் பங்கெடுத்துள்ளார் என்றும் இதன்போது இரண்டு வகுப்புகளை சேர்ந்த 35 மாணவர்களை ஒன்றாக இணைத்து பாடம் கற்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்தவகையில் குறித்த மாணவிக்கு 12 ஆசிரியர்கள் கற்பித்துள்ளனர். எனவே ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா அச்சம் காரணமாக வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்கு உள்பட்ட புளியங்குளம் இந்துக் கல்லூரி மற்றும் வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஐந்து பாடசாலைகள் ஏற்கனவே மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir